Wednesday, August 14, 2019

என் வாழ்வின் வசந்த காலம்

ஜன்னலோரம் பார்க்கிறேன்
சூரியன் கூட உன் எழில் கண்டு கண் கூசுகிறான்
முகிலின் பின் ஒளிகிறான்

உன்தன் மென்னடை கண்டு
முகிலினமும் நாணிடும்
கார்மேகமாய் உருமாறிடும்
முத்துச்சாரலாய்ப் பொழிந்திடும்

மாரியெனப் பொழியும்
உனது பேரன்பைக் கண்டு
சாரல் மழையும் மகிழ்ந்திடும்
பூக்களும் பூத்துக் குலுங்கிடும்

தன்னைக் காணுமுன் மலர்ந்த
விந்தையைக் காண வந்த நிலவு
நின்றன் திருமேனி கண்டு
வெப்பம் கொள்ளும் பொறாமையால்

நீ என் இருள் நீக்கும் புலரி
இந்த முத்துவை நனைக்கும் மாரி
நீ என் இதயத்தின் எழில் கோலம்
நீ என் வாழ்வின் வசந்த காலம்

தவம்

தவம் ஏதும் புரியாமல்
நீ  வாய்த்தாய்
இது எப்படியென்று புரியாமல்
நான் வியந்தேன்

சேரும் நாள்

அணைக்கின்ற தோள்கள்
அனலான தேகம்
மையல் கொண்ட இதழ்கள்
மோகம் கொண்ட பொழுதுகள்
இவையனைத்தும் நினைத்து ஏங்கினேன்
சேரும் நாள் தொலைவில் இல்லை எனத் தூங்கினேன்

என் மனைவி

நல்லுறவுகளை வலுப்படுத்தினாள்
நட்பு வட்டத்தினுள் நடுமைப்படுத்தினாள்

ஊண் உயிர் காதலில்
ஊற வைத்தாள்
பேரன்பின் ரசம்
பருகக் கொடுத்தாள்

மிளிரும் மேனியால்
மயக்கும் பார்வையால்
தேன் சொட்டும் மொழிகளால்
தேகமெங்கும் உணர்ச்சியால்
உள்ளம் கவர்ந்தாள்
உயிரில் கலந்தாள்

தேனுக்கே இனிப்பா?

என்னுடைய தேனுக்கு இனிப்பா கொடுப்பேன்?
அமுதத்தை மிஞ்சும் முத்தத்தைக் கொடுப்பேன்
அதில் காதல் ரசம் சொட்டச் சொட்டக் கொடுப்பேன்
முதுமையிலும் முதிராத உள்ளன்பைக் கொடுப்பேன்

திருமந்திரம் சொன்னாற் போல்
அன்பே சிவம் என்பேன்
மந்திரத்தால் ஈர்ப்பது போல்
அவளது அன்பே சுகம் என்பேன்

பெருமை

மனம் தனைப் புரிந்து கொள்
மணம் கொண்டவனே
நான் பூச்சூடினால்
மணம் தனைப் புகழ்

நான் சேலை அணிந்தால்
நிறம் தனை ரசி
நான் சமைத்தால்
ரசித்துக் கொண்டே புசி

ஊடல் கொண்டால்
கவிதை ஒன்றை வாசி
கூடல் கொண்டால்
உயிர் மூச்சனைத்தும் சுவாசி

கூறாமலே இவையனனத்தும் செய்தால்
என் உள்ளம் உவப்பு கொள்ளும்
இயல்பாக சிரிப்பேன் - மொத்தத்தில்
நான் நானாக இருப்பேன்

அதற்காக நீ உன்னை இழக்க வேண்டாம்
நீ நீயாகவே இரு
கொஞ்சம் புரிந்து கொள்
அது போதும் என்றாள்

கோபம் கொண்ட வேளையிலும்
கோதையின் மனப் பக்குவம் கண்டு
அகம் மகிழ்ந்தேன்
ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன்

பெருமை கொண்டேன்
பேரின்பத்தின் எல்லை கண்டேன்