Tuesday, December 15, 2020

தமக்கை மகன் வருணுக்கு எட்டாவது பிறந்தநாள்

ஓட்டமும் ஆட்டமுமாய்  நண்பர்களுடன் களித்து

நாட்டம் கொண்டவற்றில் நாட்களைக் கழித்து

எட்டாம் அகவையை தொட்ட வருண்

எட்டாத உயரங்களைத் தொட்டுவிட வாழ்த்துகிறோம்

Sunday, December 6, 2020

ஊடு பாவாய் அமைந்த பாடலும் அதன் இலக்கிய அழகும்

 
நீங்கள் கவிஞர் யுகபாரதி இயற்றிய "என் அன்பே நானும் நீயின்றி நான் இல்லை" என்ற பாடலை ஹாரிஸ்  ஜெயராஜின் மெல்லிசையுடன் கேட்டு  ரசித்திருக்கக் கூடும். பாடல் முழுவதும் எதுகை, மோனை, இயைபு (rhyme) என்று விளையாடி இருப்பார் யுகபாரதி.

என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:

ஊடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே

ஊடு பாவாய் என்பது கவித்துவமான ஒரு உவமை. நெய்தலுக்கு ஊடு நூலும் பாவு நூலும் மிகவும் அவசியம். அதைப் பற்றி அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை ( இணைப்பு=தொடுப்பு=கொழுவி = web link) சொடுக்கிப் பாருங்கள்:
இந்தத் தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் போல ஊடு நூலும் பாவு நூலும்  பின்னிப் பிணைந்து இருந்தால் தான் ஆடை நெய்ய முடியும்.

அந்த ஊடு நூலும் பாவு நூலும்  பின்னிப் பிணைந்து இருத்தல் போல என்னுடைய தேகமும் காதலும் ஒன்றுடன் ஒன்றுபட்டு கிடைக்கிறது என்கிறார் கவிஞர் யுகபாரதி.

அடுத்த வரியில் கூடு பாய ஆசை - அதாவது என் உடல் என்னும் கூட்டை விட்டு உன் உடல் என்னும் கூட்டுக்குள் நுழைய ஆசையாக உள்ளது  என்று அந்தப் பெண் பாடுகிறாள்.

இந்த இரு வரிகளில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள இலக்கிய நயத்தை கவனியுங்கள்:
எதுகை:
டு - கூடு
தேத்தோடு - தாத்தோடு

மோனை:
பாவாய் - பாயும்

இயைபு:
தேகத்தோடு - தாகத்தோடு
ஓடுதே - மோதுதே

செந்தொடை:
டு - கூடு
காதல் - சை
டுதே - மோதுதே
டுதே - மோதுதே

இந்த இரு வரிகள் மட்டுமல்ல பாடல் முழுவதுமே இவ்வாறாக இலக்கிய நயத்துடன் அமைந்துள்ளது. பாடலின் வரிகள் முழுவதையும் படித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ள  கொழுவியை (link) சொடுக்கவும்:
(பின்குறிப்பு: ஆனால், மேற்கண்ட கொழுவியில் சில பிழைகள் உள்ளன. கவிஞர் பெயரும் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.)
 
இந்தப் பாடலைக் கண்டு மன ஊக்கம் (inspiration) கொண்டு நான் முன்பு எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு:
நான் அடிக்கடி கவிதைகள் புனைபவன் (புனைதல் = write poem)இல்லை ஆதலால், இதை எழுதி முடிக்க வெகு நேரம் ஆனது.

Thursday, December 3, 2020

கார்குழல் கடவையே பாடலின் பொருள்

 


படத்தின் பெயர்:
வடசென்னை
வருடம்:
2018
பாடலின் பெயர்:
கார்குழல் கடவையே
இசையமைப்பாளர்:
சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்:
விவேக்
பாடகர்:
சந்தோஷ் நாராயணன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய் நாராயண், அனந்து, பிரதீப் குமார் 

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காழக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்
கார்குழல் (கருங்கூந்தல்) கொண்ட இந்த அழகியின் பின்னால் நான் எங்கே செல்கிறேன் என்று தெரியாமல் ஒரு காதல் மயக்கத்தில் சென்று கொண்டிருக்கிறேன் (கடவை = பாதை). இந்த சேலை (காழகம்) கட்டிய பெண்ணின் வழியில் சென்று கனவுலோகத்தில் மிதக்கிறேன்.

கண்ணாடிக் கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
சீன அரசர் சென்னாங் ஒரு கோப்பையில் கொதிக்க வைத்த நீரை குடிக்கும் போது, அருகிலிருந்த தேயிலைகள் வந்து எதேச்சையாக விழுந்து விடவே, அதனுடன் சேர்த்து பருகி உலகிலேயே முதன்முதலில் தேநீர் பருகும் மனிதரானார் என்று நம்பப் படுகிறது. (ஆனால் இது வெறும் கட்டுக்கதை (myth) என்று விக்கிமூலம் குறிப்பிடுகிறது. மூலம்: https://en.m.wikipedia.org/wiki/History_of_tea). 

அது போல உன் வாழ்வில் எதிர்பாராத வண்ணம் நான் சேரவே நம் வாழ்க்கை இன்பமானது.

(ஆழி = கடல். ஆனால், இங்கு நீர் என்று பொருள்படும்படி பயன்படுத்தியுள்ளார்.)

கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை
கன்னங்களைக் கைகளால் மூடி சோகமாக ஒரு ஓரமாய் நீ நின்றால் அன்று எனக்கு மிகுந்த துக்கமான நாள் ஆகும்.

கிளியே! நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய் உன் விழியே கேட்கிறேன்
உளியே! உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்
கிளி போல அழகாய் இருப்பவளே! நீ என்னை விட்டு நீங்கினால் நான் இறந்து விடுவேன். எனக்குள் இருக்கும் காதல் நெருப்பு எரிய விறகாய் உன் விழிகளைக் கேட்கிறேன். உளி ஒரு சாதாரண கல்லை சிலை ஆக்குவது போல் நீ என்னை செதுக்கி கொண்டிருக்கிறாய் - நீ என்னை செதுக்குவதை ஏற்கிறேன். உனக்காக என் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறேன்.

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காழக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்

இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனள் என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடித் திறந்ததனள் என்கிறேன்
இந்நேரம் வானத்தில் மின்னல்களை நான் பார்த்தால் நீ புன்னகை சிந்தியதால் வந்த ஒளிக்கீற்று தானோ என்றே எண்ணுகிறேன். நீ கண் மூடித் திறந்தாலே என்னுடைய நெஞ்சில் பூகம்பம் தாக்குகிறது.

கார்குழல் கடவையே என்னை எங்கே
காழக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

கிளியே! நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய் உன் விழியே கேட்கிறேன்
உளியே! உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்

கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்
காழக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்

இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை செய்தனள் என்கிறேன்
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடித் திறந்தனள் என்கிறேன்

உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று
உன்னுடைய அடாவடித்தனத்தைப் (கொட்டம்) பார்த்து, உன் பூவின் வட்டம் பார்த்து,  உன் கண்களின் விட்டம் (diameter) ஆகியவற்றைப் பார்த்து காற்றுக்கூட தீப்பற்றிக் கொள்ளும்.

தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று
உன் தோலில் இருக்கும் மச்சத்தைப் பார்த்து, உன் உடலில் முன் கண்டிராத மிச்சத்தையும் பார்த்து, இணையும் போது உன் உடலிலிருந்து சிந்தும் தேன் போன்ற லட்சம் துளிகளைப் பார்த்து, போதை அடித்தாற்போல் என் நடை சீராக இல்லாமல் போனது (பிழறிற்று).

இணையாய் உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்
உன்னுடைய இணையாய் என்னையே நான் வழிமொழிகிறேன் (recommend செய்கிறேன்).

எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லாள் எங்கே
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே
எங்கே? நெஞ்சில் நல்லாள் (நல்லதை மட்டும் எண்ணுபவள்) எங்கே? இன்பம் தரக்கூடிய எல்லாவற்றையும் மிஞ்சும் இல்லத்தரசி (இல்லாள்) எங்கே? எங்குமே வஞ்சம் (hatred) இல்லாதவள்(அல்லாள்) எங்கே? வெற்றி பெற்று, கொன்றை மலர்  மாலை சூடும் தலைவனைக் கொஞ்சும் சிறிய (சில்) பெண் எங்கே?

போரில் வெற்றி பெற்ற மன்னர்களுக்கு தமிழ் புத்தாண்டு அன்று சரக் கொன்றை மலர்களால் மாலை அணிவித்து அவர்களைக் கவுரவம் செய்வது தமிழர் பாரம்பரியத்தில் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. (மூலம்: https://m.dinamalar.com/detail.php?id=1751912)

கிளியே! நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய் உன் விழியே கேட்கிறேன்
உளியே! உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்

கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காழக வழியிலே கனவுகள்