Thursday, March 4, 2021

வாழ்க்கை என்னும் பேருந்து - குமரன் முதல் பிறந்தநாள் கவிதை

வாழ்க்கை பேருந்தின் சக்கரங்கள்
வேக வேகமாகச் சுழல்கின்றன!
அகிலத்தில் பிறந்ததே அதிசயம் என்றிருந்தேன்,
அடுத்தடுத்து நிகழ்கின்றனவே அற்புதங்கள்! - எனக்குக்

குப்புறப் படுக்கக் கற்றுக் கொடுத்தது யார்? கவினாய்த் தவழப் பயிற்றுவித்தது யார்?
அழகாய் அமரப் பாடம் எடுத்தது யார்?
நயமாய் நடக்கச் சொல்லிக் கொடுத்தது யார்?

யோசித்து தெளிந்தேன் - அந்தப் பரம்பொருள் தான்
யாசிக்காமலே அருளியுள்ளான் - அந்தப் பரந்த மனம் கொண்டவன் தான்
என் பேருந்தின் ஓட்டுநர் - நான் ஒரு பயணி மட்டுமே
எங்ஙனம் செய்நன்றி செய்வேன் அவனுக்கு?! சிந்தனையில் ஆழ்ந்தேன்.

பலன் எதிர்பாராமல் உதவி செய்பவனுக்குப்
பணியை எளிதாக்கினால் உவந்து ஆசி வழங்குவானே!
இல்லாதவர்க்கு செய்யும் தொண்டு இறைத்தொண்டு அன்றோ!
வாயார அவர் வாழ்த்தினால் அது வானுலக வாழ்த்து அன்றோ!

பொருள் ஒன்றும் கொண்டு வரவில்லை
புவியில் நான் வந்து பிறக்கையிலே!
அருள் ஒன்றும் பற்றாக்குறை இல்லை
அன்பு கொண்டு நான் அளிக்கையிலே!

மனம் முழுதும் மகிழ்ச்சி கொண்டு
மக்களுக்கு அளிக்கக் கிளம்பிவிட்டேன்!
இன்னும் என்ன தயக்கம்? வாரீர்!
இணைந்து கொள்வீர் தொண்டு ஆற்ற!

பேரன்புடன் நம் பேருந்துப் பயணத்தைப் பூரணமாக்குவோம்!

-பெருமகிழ்ச்சியுடன்
மு.குமரன் பழநியப்பன்