Sunday, May 16, 2021

மனைவிக்கு திருமணநாள் வாழ்த்து

பாடல் நான் பாெருள் நீ

நடனம் நீ நளினம் நான்

நிழற்படம் நான் நினைவுகள் நீ

நிறைகுடம் நீ நதிநீர் நான்


பயிர் நான் வேர் நீ

உயிர் நீ உணர்வு நான்

மாக்கோலம் நான் புள்ளிகள் நீ

மணக்கோலம் நீ மங்கலியம் நான்


ஓவியம் நான் ஒய்யாரம் நீ

காவியம் நீ கருப்பொருள் நான்

தவம் நான் வரம் நீ

தாரம் நீ ( - உன்) சாரம் நான் 


___________

 


பொருள்:  

நளினம் = grace  

காவியம் = epic  

கருப்பொருள் = theme  

ஒய்யாரம் = அழகு  

சாரம் = essence

மங்கலியம் = தாலி

 

முதல் வரி நான் மனைவியைப் பற்றிக் கவிதை எழுதுவதைக் குறிக்கிறது.    

 

இரண்டாவது வரி இருவரும் சேர்ந்து ஆடிய நடனத்தைக் குறிக்கிறது.    

 

மூன்றாவது வரி அவள் பரிசு தந்த நிழற்படங்களைக் குறிக்கிறது.       

 

நான்காவது வரி "நிறைகுடம் ததும்பாது" என்ற பழமொழிக்கேற்ப அவள் ஒரு நிறைகுடம் - அதாவது அலட்டிக் கொள்ளாதவள் என்பதை குறிக்கிறது. 

 

ஆறாவது வரி இருவரும் சேர்ந்து பொங்கல் பானையில் மாக்கோலமிட்டதைக் குறிக்கிறது.    

 

ஒன்பதாவது வரை நான் வரைந்த குடும்ப ஓவியத்தைக் குறிக்கிறது.    

 

பதினோராவது வரி "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற பழமொழியைக் குறிக்கிறது. 

Thursday, March 4, 2021

வாழ்க்கை என்னும் பேருந்து - குமரன் முதல் பிறந்தநாள் கவிதை

வாழ்க்கை பேருந்தின் சக்கரங்கள்
வேக வேகமாகச் சுழல்கின்றன!
அகிலத்தில் பிறந்ததே அதிசயம் என்றிருந்தேன்,
அடுத்தடுத்து நிகழ்கின்றனவே அற்புதங்கள்! - எனக்குக்

குப்புறப் படுக்கக் கற்றுக் கொடுத்தது யார்? கவினாய்த் தவழப் பயிற்றுவித்தது யார்?
அழகாய் அமரப் பாடம் எடுத்தது யார்?
நயமாய் நடக்கச் சொல்லிக் கொடுத்தது யார்?

யோசித்து தெளிந்தேன் - அந்தப் பரம்பொருள் தான்
யாசிக்காமலே அருளியுள்ளான் - அந்தப் பரந்த மனம் கொண்டவன் தான்
என் பேருந்தின் ஓட்டுநர் - நான் ஒரு பயணி மட்டுமே
எங்ஙனம் செய்நன்றி செய்வேன் அவனுக்கு?! சிந்தனையில் ஆழ்ந்தேன்.

பலன் எதிர்பாராமல் உதவி செய்பவனுக்குப்
பணியை எளிதாக்கினால் உவந்து ஆசி வழங்குவானே!
இல்லாதவர்க்கு செய்யும் தொண்டு இறைத்தொண்டு அன்றோ!
வாயார அவர் வாழ்த்தினால் அது வானுலக வாழ்த்து அன்றோ!

பொருள் ஒன்றும் கொண்டு வரவில்லை
புவியில் நான் வந்து பிறக்கையிலே!
அருள் ஒன்றும் பற்றாக்குறை இல்லை
அன்பு கொண்டு நான் அளிக்கையிலே!

மனம் முழுதும் மகிழ்ச்சி கொண்டு
மக்களுக்கு அளிக்கக் கிளம்பிவிட்டேன்!
இன்னும் என்ன தயக்கம்? வாரீர்!
இணைந்து கொள்வீர் தொண்டு ஆற்ற!

பேரன்புடன் நம் பேருந்துப் பயணத்தைப் பூரணமாக்குவோம்!

-பெருமகிழ்ச்சியுடன்
மு.குமரன் பழநியப்பன்

Thursday, February 25, 2021

நித்தில் இரண்டாம் பிறந்தநாள் வாழ்த்து

ஓடிச் சென்று வாயிலைத் திறந்து விளையாடிக் களித்து நம்மையும் மகிழ்வித்து
தேடிப் பல புதிர்களுக்கு விடை கண்டு
நாடி பல சொற்களைச் செவ்வனே கற்று

"சிக்கி புவா வேண்டும்" என்று
செல்லமாக இறைவனிடம் வேண்டி நின்று
செம்மையாக தமிழ் மொழியைப் பயின்று
இன்று போல் என்றும் உவந்திடுவாய் நன்று!

இரண்டாம் அகவையைப் பூர்த்தி செய்த நித்திலுக்கு
இறையருள் பரிபூரணமாகக் கிடைக்க வாழ்த்துகிறோம்!

 

பாெருள்:

வாயில் = கதவு

செவ்வனே = செம்மையாக = மிகச் சிறப்பாக

உவந்திடுவாய் = மகிழ்ந்திடுவாய்

அகவை = வயது

Saturday, February 20, 2021

குமரனின் பிறந்தநாள் அழைப்பிதழ்

குறும்புக் குழந்தை குமரனின்
குதூகலமான முதல் பிறந்தநாளிது
வாழ்க்கை என்னும் பேருந்தின்
வாகான முதல் நிறுத்தமிது
தங்கமான மனம் கொண்டவர்கள்
தங்கள் நல்லாசிகளை நல்கிடுங்கள் 

பொருள் :

வாகு = அழகு

நல்குதல் = அளித்தல்

Saturday, February 6, 2021

யோகேஷ் மனைவிக்குப் பிறந்தநாள் வாழ்த்து

மனையாளாகச் சிறந்து
அன்னையாக உயர்ந்து
தோழியருடன் மகிழ்ந்து குலவி
உவப்புடன் நிதம் உலவி 
பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்

கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து

 

சாந்தம் நிலவும் முகமும்
பாசம் காட்டும் மனமும்
படிப்பில் செலுத்தும் நாட்டமும்
உடற்பயிற்சி செய்யும் திறமும்
கொண்டு பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறாேம்.

Friday, February 5, 2021

சரோஜா பிறந்தநாள் வாழ்த்து

 

ஆட்டங்கள் ஆடி, பாட்டுக்கள் பாடி 
ஆனந்த வெள்ளத்தில் திளைத்திடுவாள்
ஆர்வத்துடன் நடன அமைப்பு செய்திடுவாள்
அனைவருக்கும் இன்பத்தை விளைத்திடுவாள்

அன்புடன் தம்பியைப் பார்த்துக் காெள்வாள்
ஆவலுடன் தங்கையுடன் விளையாடிக் களிப்பாள்
பண்புடன் பெற்றவர்க்குச் சமையல் செய்வாள்
புன்னகை அணிகலன் அணிந்திடுவாள்

இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்